இந்தியா

சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி?.. பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!

webteam

“பரிக்‌ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சியில் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி என மாணவர் கேட்ட கேள்விக்கு, “ஊடகம் எது என்பது முக்கியம் அல்ல. உங்கள் கவனம் எதில் இருக்கிறது என்பதுதான் முக்கியம் என பிரதமர் மோடி பதிலளித்தார்.

தேர்வுகளை மாணவர்கள் பயமின்றி எதிர்கொள்ள ஏதுவாக வருடந்தோறும் நடைபெறும் “பரிக்ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சியில் ஐந்தாவது பதிப்பில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி என மாணவர் ஒருவர் பிரதமர் மோடியிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு மோடி,“ஆன்லைன் கிளாஸ் அல்லது வகுப்பறை என எந்த ஊடகம் என்பது முக்கியம் அல்ல! நாம் எப்படி கவனம் செலுத்துகிறோம் என்பது தான் முக்கியம். பெரும்பாலும் வகுப்பறையில் உங்கள் உடல் வகுப்பில் இருக்கும். உங்கள் கண்கள் ஆசிரியரின் மேல் இருக்கும். ஆனால் பல சமங்களில் ஆசிரியர் நடத்துவது உங்கள் காதில் பதிவதில்லை. அதற்குக் காரணம் உங்கள் மனம் வேறிடத்தில் உள்ளது. ஆகவே ஊடகம் பிரச்னை அல்ல. உங்கள் மனம் தான் பிரச்னை.” என்றார்.

மேலும் “நீங்கள் கவனத்துடன் இருந்தால், ஆர்வத்துடன் முயற்சி செய்து கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால், பயன்முறையில் எந்த மாற்றமும் இல்லை. குருகுலங்களில், அச்சிட்ட காகிதங்கள் இல்லை. ஆனால் அவர்கள் அதை வாய்வழி வடிவத்தில் கற்றுக்கொண்டு நினைவில் வைத்துக் கொண்டனர். இப்போது எங்களிடம் ஆன்லைன் கற்றல் முறைகள் இருப்பது பரிணாமம் தான்.

ஆன்லைனில் தோசை எப்படி செய்யப்படுகிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் அது வயிற்றை நிரப்பாது. உங்கள் வயிற்றை நிரப்ப நீங்கள் அதை செய்து பார்க்க வேண்டும். அதிலுள்ள தவறுகளை திருத்த கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் அடிப்படைகளை மேம்படுத்த ஆன்லைனில் பயன்படுத்தவும், இதனால் உங்கள் ஆஃப்லைன் கல்வியையும் மேம்படுத்தவும். ஆன்லைன் உங்கள் படிப்பை விரிவுபடுத்த உதவும். மாணவர்கள் ஆன்லைன் கற்றலை ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும், "ஒரு பிரச்னையாக" அல்ல” என பிரதமர் மோடி கூறினார்.