இந்து- முஸ்லிம் தம்பதியினருக்கு ஹோட்டலில் ரூம் தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர் சபீஸ் சுபைதா ஹக்கிம் மற்றும் திவ்யா. இவர்கள் இந்து, முஸ்லிம்மாக இருந்தாலும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அலுவலக வேலையாக தம்பதியினர் பெங்களூரு சென்றிருக்கின்றனர். அங்கு சில நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அங்குள்ள ஹோட்டலில் தங்கலாம் என முடிவெடுத்து, ஹோட்டல் ஒன்றிற்கு சென்றிருக்கின்றனர். ஆனால் இவர்களை பார்த்த ஹோட்டல் வரவேற்பரையில் இருந்தவர்கள், ஹோட்டலில் ரூம் தர மறுத்திருக்கின்றனர். "நீங்கள், இந்து, முஸ்லிம்மாக இருக்கிறீர்கள். எனவே இங்கு உங்களை தங்க வைக்க முடியாது. இந்து-முஸ்லிம் தம்பதியினரை தங்க வைத்தால் ஏதாவது பிரச்னை வரலாம். எனவே அவர்களுக்கு ரூம் தர கூடாது என நிர்வாகத்திடம் இருந்து அறிவுறுத்தல் வந்துள்ளது" என கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹக்கிம், சில மணி நேரம் மட்டும் அறையை கொடுக்க கூறி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் அதற்கும் இசைந்துகொடுக்காத ஹோட்டல் நிர்வாகம் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கேரள மனித உரிமை ஆணையத்தை நாடவும் தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர்.