பிரசவத்தின் போது அவசியமின்றி அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு கட்டுப்பாடுகள் கொண்டு வருமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் லாப நோக்கம் கருதி பல சமயங்களில் தேவை இன்றி, பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்வதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.
10 முதல் 15 சதவிகித பிரசவங்களே அறுவை சிகிச்சை மூலம் நடைபெற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். தமிழகத்தில் 34% பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலமே நடைபெறுவதாக அவர் கூறியிருந்தார்.