இந்தியா

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்துஸ்தான் ஏரோநேடிக்ஸின் பயணிகள் விமான சேவை தொடக்கம்!

ஜா. ஜாக்சன் சிங்

இந்துஸ்தான் ஏரோநேடிக்ஸ் நிறுவனத்தால் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர் 228 விமானத்தின் பயணிகள் சேவை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் போயிங், ஏர்பஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் விமானங்களைக் கொண்டுதான் பயணிகள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தை கொண்டு இன்று முதல் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. 17 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக விமானமாக இதனை, இந்துஸ்தான் ஏரோநேடிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

டோர்னியர் ரக விமானங்களை பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே பயன்படுத்தி வரும் நிலையில், முதன்முறையாக இந்த விமானத்தின் வாயிலாக பயணிகள் சேவை தொடங்கியுள்ளது.

அசாமின் திப்ரூகர் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தின் பசிகட் இடையே இந்த விமானத்தின் சேவையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூவுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தார். அசாம் மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்களுக்கு இடையே அல்லையன்ஸ் ஏர் நிறுவனம் இந்த விமானத்தை ஏப்ரல் 18 -ம் தேதி முதல் தினசரி சேவையாக இயக்க உள்ளது.