இந்தியா

பேராசிரியர்களின் பதவி உயர்வுக்கு இனி ஆராய்ச்சி கட்டாயமல்ல - மத்திய அரசு முடிவு

rajakannan

கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கான பேராசிரியர்களுக்கான பதவி உயர்வுகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. 

பேராசிரியர்கள் தன்னுடைய பணிக்காலத்தில் மேற்கொள்ளும் ஆராய்ச்சி மற்றும் கட்டுரைகள் வெளியீடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஏபிஐ(Academic Performance Indicators) என்னும் இந்தப் பழைய முறையை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தற்போது முற்றிலும் நீக்கியுள்ளது.  

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “கல்லூரி ஆசிரியர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று இனி கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். ஆராய்ச்சி என்பது அவர்களுக்கு இனி தேர்வாக(ஆப்ஷனல்) மட்டுமே இருக்கும். கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பதவி உயர்வுக்கு 2021 ஜூலை முதல் பி.ஹெச்டி இனி கட்டாயமாக இருக்கும். அதேபோல், ஜூலை 2017 முதல் பேராசிரியர் பணி நியமனத்திற்கே பி.ஹெச்டி கட்டாயமாக்கப்படும்” என்று கூறினார்.

இனி பதவி உயர்வுக்கு தேர்வுகள் மூலம் மேற்கொள்ளப்பட மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.  இது வரும் 2022 முதல் அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பயிற்றுவிப்பு திறனை அதிகரிக்க இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பல்கலைக் கழகத்தில் முதுகலை படிப்பு அளவிலான பேராசிரியர்களுக்கு ஏபிஐ முறை தொடர்ந்து கட்டாயமாக இருக்கும். புதிதாக நியமிக்கப்படும் உதவி பேராசிரியர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி வகுப்பு அறிமுகப்படுத்தப்படும்.