இந்தியா

தரையிறங்க முடியாமல் அங்குமிங்கும் சுழன்ற ஹெலிகாப்டர் - பக்தர்கள் பீதி

ஜா. ஜாக்சன் சிங்

உத்தராகண்டில் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்கும் சுழன்றதால் அங்கிருந்த பக்தர்கள் அச்சம் அடைந்தனர்.

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு தனியார் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்குவதற்காக வந்தது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் பயங்கரமாக சுழன்றது. இதனை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். இந்நிலையில், ஹெலிகாப்டர் வேகமாக இறங்கியதால் தரையில் பட்டதும், மீண்டும் எம்பி குதித்து 270 டிகிரி கோணத்தில் ஹெலிகாப்டர் சுழன்றது.

எனினும், விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு ஒரு வழியாக ஹெலிகாப்டரை பாதுகாப்பாக தரையிறக்கினார். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.