இந்தியா

விடாமல் கொட்டும் மழை..வெள்ளக்காடாய் மாறிய மகாராஷ்டிரா - உயிரிழப்பு 136 ஆக அதிகரிப்பு

webteam

மகாராஷ்டிராவில் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலமே வெள்ளக்காடாய் மாறிவிட்டது. மழைநீரில் மூழ்கிய குடியிருப்புகளில் சிக்கி தவிக்கும் மக்களை இரவு பகல் பாராது தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர். குறிப்பாக ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் நகரம் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. மும்பை, பால்கர், கோலாப்பூர் என பல மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. புனே அருகே கடக்வாஸ்லா அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால், அணை திறக்கப்பட்டது. கனமழையால் மும்பை - கோவா நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. கோவாவில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Mahadayi நதிநீர் ஊருக்குள் புகுந்ததில், நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில், “மகாராஷ்டிராவில் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் ராய்காட் மற்றும் சதாரா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்ததால் 84,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். மேலும், 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.