எல் நினோ காலநிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமே கோடைக்காலம் தொடங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை, பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நினோ மாற்றம் இந்திய துணைக் கண்டத்தில் கடுமையான வெப்ப அலைகள், வறட்சி மற்றும் அதீத மழைப்பொழிவை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது. எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை அதிகரிப்பால் உருவாகும் காலநிலை நிகழ்வு. இது இந்திய பருவமழையை பாதித்து, சில பகுதிகளில் மழைப்பொழிவு குறைவதற்கும், வெப்பநிலை அதிகரிப்பதற்கும் காரணமாக இருக்கலாம். வலுவான எல் நினோ ஆண்டுகளில், தென் இந்தியாவில் குறிப்பாக பகல் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரி வெப்பநிலை வழக்கத்தைவிட 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ்வரை அதிகரிக்கக் கூடும்.
பொதுவாக, சென்னையில் குளிர்ச்சியாக இருக்கும் டிசம்பர் முதல் பிப்ரவரி பாதியிலான காலகட்டம், கடுமையான வெயிலுடன் காணப்படும். அதாவது, ஜனவரி, பிப்ரவரியில் இயல்பைவிட அதிகபட்ச வெப்பநிலை பதிவாகலாம். நீர்நிலைகள் வேகமாக வறண்டு போகும் அபாயம் அதிகரிக்கலாம். விவசாயத்தில் நீர்ப்பாசனத் தேவை அதிகரிக்கலாம். மார்ச்–மே மாதங்களில் வெப்ப அலை தீவிரமாக உணரப்படலாம்.
மேலும், ஒரு மணிநேரத்தில் பெய்ய வேண்டிய மழையானது, வெறும் 20 நிமிடங்களிலேயே கொட்டித் தீர்க்கும் ஆபத்து உள்ளதால், நகர்ப்புறங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கும் நீர் தேங்குவதும் ஏற்படும். இந்த எல் நினோ தாக்கம் மேலும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால், 2027ஆம் ஆண்டின் கோடைக்காலம் இதுவரை இல்லாத அளவு மிகக் கடுமையானதாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் மேலாண்மைத் திட்டங்களை தற்போதிலிருந்தே திட்டமிடுவது அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.