பீகாரில் வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் 61 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பீகார் தலைநகர் பாட்னாவில் 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
கடுமையான வெப்பம் காரணமாக, அவுரங்கபாத், கயா, நாவாடா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 61 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாட்னாவில் வரும் 19 தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் மக்கள் வெளியே வரவேண்டாம் என பீகார் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அதி தீவிர வெப்ப அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.