கோடை வெயில்  முகநூல்
இந்தியா

அடுத்த 48 மணி நேரம்.. வெப்ப அலையைச் சந்திக்கப் போகும் நகரங்கள் எவை? IMD எச்சரிக்கை!

பருவநிலை மாற்றத்தால் வெப்ப அலைகள் முன்கூட்டியே தாக்குவதாகவும், நீண்ட காலம் நீடிப்பதாகவும், மேலும் தீவிரமாக உணரப்படுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Prakash J

இந்திய வானிலை ஆய்வு மையம், ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதி முதல் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சில தனித்த பகுதிகளில் வெப்ப அலை ஏற்படக்கூடும் என அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

கோடைகால வெயில் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதன் தாக்கம் இந்தியா மட்டுமின்றி, தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பகல்பொழுதில் வெப்பம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசவிருப்பதால், பல மாநிலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.

கோடை

இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லி-என்சிஆர் பகுதியில் முதல் முறையாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் 42-43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகலாம். இதுதவிர மகாராஷ்டிராவின் விதர்பா, மராத்வாடா மற்றும் மத்திய பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் 18 வரையிலும், மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஏப்ரல் 16 முதல் 18 வரையிலும் கடும் வெப்ப அலை நிலவ அதிக வாய்ப்புள்ளது.

அதேபோல், ஒடிசாவின் உள் மற்றும் சில கடலோரப் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் 18 வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சத்தீஸ்கரில் ஏப்ரல் 16 முதல் 19 வரை வெப்ப அலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாக்பூர், போபால், அமராவதி மற்றும் புவனேஸ்வர் போன்ற இடங்களில் ஏப்ரல் 16 வரை வெப்பநிலை 42°C முதல் 45°C வரை நிலவக்கூடும், மேலும் சில பகுதிகளில் வெப்பம் இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால், 2026-ஆம் ஆண்டின் உண்மையான கோடைக்காலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இப்போது, ​​வானம் தெளிவாக இருப்பதாலும், மழைக்கான அறிகுறி இல்லாததாலும், வெப்பம் வேகமாக அதிகரித்து வருவது காரணமாகச் சொல்லப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் வெப்ப அலைகள் முன்கூட்டியே தாக்குவதாகவும், நீண்ட காலம் நீடிப்பதாகவும், மேலும் தீவிரமாக உணரப்படுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், வெப்ப அலை காரணமாக மக்கள் அனைவரும் வெயில் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் எனவும், உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.