இதயமாற்று அறுவை சிகிச்சை
இதயமாற்று அறுவை சிகிச்சை புதியதலைமுறை
இந்தியா

இதயத்திற்காக காத்திருந்த சிறுமி.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்.. வெற்றிகரமாக முடிந்த ஆபரேஷன்!

யுவபுருஷ்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள ராவி வலசை கிராமத்தைச் சேர்ந்த 50 வயது நிரம்பிய ராஜேஸ்வர ராவ், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தார்.

இதயம்

மீளாத்துயரிலும் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். இதற்கிடையே தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி லகரி, இதய பாதிப்பு காரணமாக திருப்பதியில் உள்ள பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த ஆறாம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்தார்.

சிறுமி லகரிக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்திருந்தனர். எனவே சிறுமியின் பெற்றோர், ஆந்திர அரசின் ஜீவதானம் திட்டத்தின் மூலம் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யத் தேவையான இதயத்திற்காக மகளின் பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.

இந்தநிலையில் மூளை சாவு அடைந்த ராஜேஸ்வராவ் இதயத்தை சிறுமி லகரிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின் பேரில் ஸ்ரீகாக்குளத்தில் இருந்து ராஜேஸ்வர்ராவின் இதயம் ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து விமானம் மூலம் அந்த இதயம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள பத்மாவதி குழந்தைகள் இதயநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து, மருத்துவர்கள் சிறுமி லகரிக்கு வெற்றிகரமாக இதயமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். கடந்த ஓராண்டு காலத்தில் பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் மட்டும் 10 பேருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.