இந்தியா

இந்தியாவில் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி வரலாம் - மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் தகவல்

webteam

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு சில வாரங்களில் அனுமதி வழங்கப்படலாம் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேஷ் பூஷன், “இந்தியாவில் மொத்தம் 9 கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் 6 கொரோனா தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன. 3 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளன.

கடந்த 4 நாட்களில் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம், அமெரிக்க மருந்து நிறுவனமான பைசரின் இந்திய நிறுவனம் ஆகியவை தங்களது தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளன.

அடுத்த சில வாரங்களில் சில தடுப்பூசி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம். இதுபற்றி முன்கூட்டியே தெரிவிக்க முடியாது. அதுபற்றி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல்தான் முடிவெடுக்கும்” எனத் தெரிவித்தார்.