மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, எப்ஸ்டீனை 3-4 முறை சந்தித்ததாகவும், அவருடன் எந்த தனிப்பட்ட தொடர்பும் இல்லையெனவும் கூறியுள்ளார். அவர் ஐபிஐ குழுவின் ஒரு பகுதியாக மட்டுமே எஃப்ஸ்டீனை சந்தித்ததாகவும், இது முற்றிலும் தொழில்முறை தொடர்பாக இருந்தது என்றும் விளக்கமளித்தார்.
எப்ஸ்டீன் கோப்புகளுடன் தொடர்புபடுத்தி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மறுத்துள்ளார். சர்வதேச அமைதி நிறுவனம் (International Peace Institute - IPI) குழுவில் ஒருவராக பாலியல் குற்றவாளியான எஃப்ஸ்டீனை சந்தித்ததாகக் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் ராகுல் காந்தியின் பரபரப்பான உரைக்குப் பிறகு, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய ராகுல் காந்தி, "அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை?. காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது. அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும்” என கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஐபிஐயின் கீழ் பன்முகத்தன்மை குறித்த சுயாதீன ஆணையத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது எப்ஸ்டீனை சந்தித்ததாகவும் அவர் கூறினார். ஐபிஐ யின் தலைவர் டெர்ஜே ராட்-லார்சன் எப்ஸ்டீனை அறிந்திருந்தார், துல்லியமாகச் சொன்னால் எஃப்ஸ்டீனை 3 அல்லது அதிகபட்சம் 4 முறை சந்தித்திருக்கிறேன். எஃப்ஸ்டீன் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கினார்.
மேலும், “எனது தொடர்புகள் முற்றிலும் தொழில்முறை சார்ந்தவை மற்றும் பிற சர்வதேச பணிகளுடன் தொடர்புடையவை” என்று ஹர்தீப் பூரி கூறினார்.
ராகுல் காந்தி தெரிவித்த எப்ஸ்டீன் கோப்புகள் தவறான குற்றங்களைப் பற்றியது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் கொண்டது . இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். எனது தொடர்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.