ஜெட் ஏர்வேஸ் விமானி, ஹோஸ்லின் என்பவர் பயணி ஒருவர் மீது நிறவெறி கொண்டு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியது, பெண் ஒருவரைத் தாக்கியது மற்றும் மாற்றுத் திறனாளியை திட்டியது குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்தில், இதனை உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ள ஹர்பஜன் சிங், “இந்த விமானி என்னுடன் பயணித்த மற்றொரு இந்தியரை ’யூ பிளடி இந்தியன், கெட் அவுட் ஆஃப் மை பிளைட்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டினார், ஆனால் அவர் பணம் சம்பாதித்து வாழ்வதோ, நமது நாட்டில்” என்று டிவீட் செய்துள்ளார்.
மேலும், ’இந்தப் பைலட் நிறவெறி கொண்டவர் மட்டுமல்ல, பெண் ஒருவரை தாக்கியுள்ளார், மாற்றுத் திறனாளி ஒருவரை மோசமாகத் திட்டினார். மிகவும் இழிவான செயல் இது. இதற்காக ஜெட் ஏர்வேஸ் தலைகுனிய வேண்டும். இந்தப் பைலட் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் நாட்டில் இன்னொரு முறை ஒருவர் இப்படி நடந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு முடிவு கட்டுவோம்’ என்று, நிறவெறி குறித்து ஹர்பஜன் சிங் உணர்வுபூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.