இந்தியா

யார் இந்த ஹாதியா...? அகிலா ஹாதியாவாக மாற என்ன காரணம்..?

யார் இந்த ஹாதியா...? அகிலா ஹாதியாவாக மாற என்ன காரணம்..?

webteam

நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படும் நபராக உருவெடுத்துள்ளார் ஹாதியா. விரும்பி திருமணம் செய்து கொண்டதாக கூறும் ஒருவரை, மண வாழ்க்கையில் இருந்து நீதிமன்றம் விலக்கி வைத்தது ஏன்?

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த கே.எம்.அசோகன் - பொன்னம்மா தம்பதியின் ஒரே மகள் அகிலா. அசோகன் தம்பதி இந்து மதத்தில் தீவிரப் பற்றுக் கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. உள்ளூர் அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்த அகிலா, கடந்த 2010ஆம் ஆண்டு சேலத்தில் உள்ள சிவராஜ் ஹோமியோபதி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் சேர்ந்தார்.

அங்கு பயின்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜெசீலாவும், அவரது சகோதரி ஃபசீனாவும் அகிலாவுக்கு தோழிகளானார்கள். பின்னர் விடுதியில் இருந்து வெளியேறி வீடு எடுத்து தங்கியிருந்தபோது ஜெசீலாவும், ஃபசீனாவும் ஐந்து வேளை தொழுகையில் ஈடுபடுவதைப் பார்த்த அகிலாவுக்கு, இஸ்லாம் மதத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்தக் காலக்கட்டத்தில் இஸ்லாமிய வழக்கங்களைப் பின்பற்றத் தொடங்கிய அகிலா, கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர், 2015 செப்டம்பரில் இஸ்லாம் மதத்தை தழுவுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்கினார். அப்போது அகிலா என்ற பெயரை ஹாதியா என்று அவர் மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தருணத்தில் தனது வீட்டில் நடந்த மத ரீதியிலான சடங்கு ஒன்றில் அகிலா பங்கேற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இத்தகைய சூழலில், இஸ்லாமிய தோழிகளின் வீட்டில் தனது மகள் அகிலா இருப்பதாக கடந்த ஆண்டு உள்ளூர் காவல்நிலையத்தில் அசோகன் புகார் அளித்ததை அடுத்து அந்தப் பெண்களின் தந்தை அபுபக்கர் கைது செய்யப்பட்டார்.

இந்தத் தருணத்தில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்த அசோகன், தனது மகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துவிட்டதாகக் கூறியிருந்தார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான அகிலா என்ற ஹாதியா, தனது விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாம் மதம் பற்றி அறிந்து வருவதாகவும், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்த ஸைனபா என்ற பெண்ணுடன் தங்கியிருப்பதாகவும் கூறியிருந்தார். பிறகு 2016 ஆகஸ்ட் மாதம் கேரள உயர்நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்த அசோகன், தனது மகளை கட்டாயப்படுத்தி சட்டத்திற்குப் புறம்பான முறையில் மதமாற்றம் செய்துவிட்டதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் கோரியிருந்தார். தனது மகள் அகிலாவை சிரியாவிற்கு கடத்தி, அவரை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அசோகன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்ற சூழலில், ஹாதியா கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஷாகின் ஜெகான் என்ற இஸ்லாமியரை மணந்தார். இதற்கு எதிராக அசோகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அந்தத் திருமணம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்திருப்பதாகக் கூறி, அது சட்டரீதீயாக ஏற்கத்தக்கதல்ல என கடந்த மே மாதம் அறிவித்தது. பின்னர் ஹாதியா அவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கு எதிராக ஷாகின் ஜெகான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஹாதியா - ஜெகானின் திருமணம் செல்லாது என்று அறிவிக்க ‌கேரள உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறினர். இருப்பினும், கேரளாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான செயல்கள் ஏதும் நடைபெறுகிறதா என்பதை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேசிய புலனாய்வு அமைப்பைக் கேட்டுக்கொண்டனர். இதற்கு எதிராக கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், இவ்வழக்கை விசாரிக்கும் ஆற்றல் காவல்துறைக்கு உள்ளது என்றும், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணை தேவையில்லை எனவும் கூறியது.

இதையடுத்து ஹாதியாவின் கணவர் ஷபின் ஜகான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், “24 வயதாகும் மேஜரான பெண்ணுக்கு யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், எந்த மத நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை உள்ளது” என்று கூறியிருந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஷபின் ஜகான் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராயினர்.

நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது. சம்பந்தப்பட்ட பெண்ணை சந்திக்க கணவருக்குக் கூட அனுமதி வழங்கவில்லை. அந்தப் பெண்ணை அழைத்து இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அந்த பெண்ணின் வீட்டை சுற்றி போலீஸார் உள்ளனர். அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை என கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் வாதிட்டனர்.

பெண்ணின் தந்தை சார்பில் மூத்த வழக்கறிஞர் மாதவி திவான் வாதிட்டார். “சில சதி வேலைகளால் அகிலா மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். பெண்ணை ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் அதில் பெண்ணின் தந்தைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றார். பல கட்டங்களை கடந்து வந்த இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 27ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ஹாதியாவின் விருப்பத்தைக் கேட்டனர். அவர் தனக்கு விடுதலையும் சுதந்திரமும் வேண்டும் எனக் கூறினார். தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். படிப்பைத் தொடர விரும்புகிறாரா என நீதிபதிகள் கேட்டதற்கு நிச்சயமாக என ஹாதியா பதிலளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை சேலம் ஹோமியோபதி கல்லூரியில் படிப்பைத் தொடர ஏற்பாடு செய்யுமாறும் அவருக்கு விடுதியில் இடம் தருமாறும் கல்லூரிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு கல்லூரி முதல்வரை பாதுகாவலராக நியமித்தும் உத்தரவிடப்பட்டது.


தனியார் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஹாதியா பேசும் போது, “எனக்கு பிடிக்காதவர்களுடன் கடந்த ஆறு மாத காலமாக வாழ்ந்து வந்தேன். எனது பெற்றோர்கள் என்னை மனமாற்றம் செய்ய முயற்சித்தார்கள். 6 மாதமாக செய்திதாளையோ, தொலைக்காட்சிகளையோ பார்க்காமல், இருட்டில் வாழ்ந்து வந்தேன். என் கணவரை கூட சந்திக்க முடியாமல் இருந்தேன். என்விருப்பம் எல்லாம் விரும்பியவர்களுடன் பேச வேண்டும் என்பது தான். நீதிமன்றத்தில் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று கேட்டேன், ஆனால் இதுவரை என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. நான் சுதந்திரமாக இருக்கிறேனா, இல்லையா என்பதை என்னால் தெரிவிக்க முடியவில்லை. இது போன்ற சுதந்திரத்தை எதிர்பார்க்கவில்லை. இதுவும் மற்றொரு சிறை போல் இருக்குமோ என எண்ண தோன்றுகிறது.

எல்லா குடிமக்களும் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகளைத்தான் நான் கோருகிறேன். இதில் அரசியலோ, ஜாதியோ இல்லை. நான் நேசித்த ஒருவரை பார்க்க விரும்புகிறேன். நீதிமன்றம் அனுமதிக்கும் என்று நம்புகிறேன். என்னிடம் செல்போன் இல்லை. அடிப்படை சுதந்திரம் வேண்டும் என்று நான் நீதிமன்றத்தில் கோரி இருந்த போதும், இதுவரை நான் யாரையும் தொடர்பு கொண்டு பேசவே இல்லை. தற்போது கல்லூரி சிறையில் சிக்கியுள்ளேன் என வேதனையோடு தெரிவித்தார்.