இந்தியா

எண்ணி ஆறே மாதத்தில் அம்பலமான மனைவியின் ரகசியங்கள்.. அதிர்ந்துப்போன கணவன்.. பகீர் தகவல்கள்!

JananiGovindhan

மேட்ரிமோனி மூலம் பழகிய பெண்ணுடன் தன் வாழ்நாள் முழுவதும் வாழப் போவதாக எண்ணி வாழ்க்கையை தொடங்கியவருக்கு எண்ணி ஆறே மாதத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அது என்னவெனில், மணமுடித்து வாழ்ந்து வந்த பெண் ஒரு தேர்ந்த குற்றவாளி என்பதுதான் அந்த அதிர்ச்சி. இந்த நிகழ்வு குஜராத்தின் போர்பந்தரைச் சேர்ந்தவருக்கு நடந்திருக்கிறது.

போர்பந்தரின் ஜலராம் குதிர் பகுதியைச் சேர்ந்தவர் விமல் கரியா. காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர், கடந்த 2021ம் ஆண்டு மணமகள் தேடி ஆன்லைன் மேட்ரிமோனி தளத்தில் பதிந்திருக்கிறார். அப்போதுதான் அசாமை சேர்ந்த ரிடா தாஸ் என்ற பெண்ணின் அறிமுகம் விமலுக்கு கிடைத்திருக்கிறது.

இருவரும் மேட்ரிமோனி மூலமே பேசி பழகி வந்தவர்கள் ஒருகட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். அப்போது ரிடா தன்னுடைய பக்கத்தில் விவாகரத்தானவர் என குறிப்பிட்டதால் அவருடைய விவாகரத்து சான்றிதழை விமல் கேட்டிருக்கிறார்.

அதற்கு, அந்த கல்யாணம் பஞ்சாயத்துதாரர்களால் நடத்தி வைக்கப்பட்டது. அதற்கு சான்றிதழ் எதுவும் இல்லை என ரிடா தாஸ் கூற இதனை நம்பிய விமல் அவரை அகமதாபாத்தில் வைத்து முறைப்படி திருமணமும் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.

இப்படியாக ஆறு மாதங்கள் கழிய திடீரென அசாமில் இருந்து தன்னுடைய அம்மா தொடர்புகொண்டு நிலப் பிரச்னை தொடர்பாக வந்து செல்லும்படி கூறியதாகச் சொல்லி ரிடா தாஸ் அசாம் சென்றிருக்கிறார். ஊருக்கு போன ரிடா திரும்பி வராததால் சற்று தவித்து போயிருக்கிறார் விமல்.

இந்த நிலையில்தான் ரிடாவின் வழக்கறிஞர் எனக் கூறி ஒருவர் விமலை தொடர்புகொண்டு, ரிடாவுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டிருக்கிறது. அதில் ரிடாவுக்கு ஜாமின் கிடைக்க வேண்டுமென்றால் 1 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் எனக் கூறியதோடு, பதற்றப்பட வேண்டாம். பிரச்னையாக எதுவும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து பணத்தை அனுப்பி வைத்த விமலுக்கு அந்த வழக்கறிஞர் அனுப்பி வைத்த ஆவணத்தில் இருந்த தகவல் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதாவது ரிடா தாஸின் பெயர் ரிடா செளஹான் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுபோக மோசடி, திருட்டு, கொலை மற்றும் விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் அதன் மூலம் அறிந்துகொண்ட விமல் ரிடாவிடம் ஃபோனில் பேசியிருக்கிறார்.

அப்போது விமலின் கேள்விக்கு முறையாக பதிலளிக்காமல் ஃபோனை துண்டித்த ரிடா அவரை பிளாக்கும் செய்திருக்கிறார். இதனையடுத்து சந்தேகமடைந்த விமல் கூகுளில் ரிடா குறித்து தேடவே முழு விவரமும் தெரிய வந்திருக்கிறது.

அதன்படி, திருட்டு, ஆயுதக்கடத்தல், மோசடி, காண்டாமிருகங்களை வேட்டையாடுதல் போன்ற பல குற்றப் பின்னணிகளை கொண்டவர் என்பது தெரிய வந்திருக்கிறார்.

மேலும் கடந்த 24 ஆண்டுகளில் 5000 கார்களை திருடிய அனில் செளகான் என்ற பிரபல குற்றவாளியின் மனைவிதானாம் இந்த ரிடா. 2007ம் ஆண்டு இருவருக்கும் திருமணமான நிலையில் 2015ம் ஆண்டு இவர்கள் மீது கார் திருட்டு வழக்கு பதியப்பட்டதாகவும், அதற்கு பிறகு அனில் ஜெயில் அடைக்கப்பட்டதால் இருவருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று ரீடா கூறியதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் அறிந்த பிறகு, தன்னை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்ட ரிடாவை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு போர்பந்தர் காவல்துறையினர் விமர் கரியா புகார் அளித்திருக்கிறார்.