இந்தியா

கட்சி நிகழ்ச்சியில் போதையில் தள்ளாடிய பாஜக தலைவர்.. வைரல் வீடியோவால் காலியான பதவி!

JananiGovindhan

இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியின் திரெளபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுள்ளார். இதனைக் கொண்டாடும் வகையில் பாஜகவினர் நாடு முழுவதும் பாராட்டு விழா நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் குஜராத் மாநிலத்தின் சோட்டாடேபூர் என்ற மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்றதை கொண்டாட்டி கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.

அதில், பாஜகவின் மாவட்ட தலைவரான ராஷ்மிகாந்த் வசவா என்பவர் முழு போதையில் தள்ளாடி வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதோடு, மேடையில் இருந்தபோது மதுபோதையில் தூங்கியும் வழிந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பாஜக அமைச்சர் நிமிஷா சுதாரும் பங்கேற்றிருந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரது கண்டனங்களையும் பெற்றுள்ளது. மேலும் அம்மாநில காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரும் பாஜகவின் ராஷ்மிகாந்த் வசா பொது நிகழ்ச்சியில் குடித்துவிட்டு வந்தது பலரிடையேவும் முகம் சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என சுட்டிக்காட்டி கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் பூதாகரமாக, மாநில பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்க தயாராகியிருந்ததை அடுத்து, ராஷ்மிகாந்த் வசவா, தன்னுடைய மாவட்ட
தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கைப்பட எழுதி கொடுத்திருக்கிறார்.

இதனையடுத்து பாஜகவை கடுமையாக சாடிய குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஜக்திஷ் தாகூர், குஜராத்தில் மதுவிலக்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து ட்விட்டர் மூலம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.