இந்தியா

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் ரத்து செய்தால் அபராத தொகைக்கும் GST வசூலிக்கப்படும்!

JananiGovindhan

இந்தியாவில் பண்டிகை காலம் அடுத்தடுத்து வரும் வேளையில் ரயில் பயணிகளுக்கு கவலை அளிக்கும் வகையில் முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

நீண்ட நேரம் ஆனாலும் குறைந்த விலையிலான போக்குவரத்து சேவையை கொண்டிருக்கும் ரயில் போக்குவரத்தை அன்றாடம் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் தொலைதூர பயணம் என்றாலே ரயில் சேவை அனைவருக்கும் எட்டும் போக்குவரத்தாக இருக்கும்.

அந்த ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள பல்வேறு வசதிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் சில அதிர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை விழிப்பிதுங்கச் செய்வதிலும் தவறுவதில்லை.

அந்த வகையில், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் உறுதியான பிறகு ரத்து செய்யப்பட்டால் கேன்சலேஷன் கட்டணம் பொதுவாக வசூலிக்கப்படும். தற்போது அதற்கு ஜி.எஸ்.டியும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்வதென்பது அதன் சேவையை பெறுவதற்கான ஒப்பந்தம் போன்றது.

அதற்கான டிக்கெட் உறுதியான போதும் அதனை ரத்து செய்வதால் ரயில் சேவையை வழங்கும் IRCTC நிறுவனத்துக்கு இழப்பீடாக இதுவரை கேன்சல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அதற்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டியும் சேர்த்து வசூலிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேபோல செகண்ட் கிளாஸ் ஏசி கோச் டிக்கெட்டாக இருந்தால் ரூ.200+5%, மூன்றாம் வகுப்பு ஏசியாக இருந்தால் ரூ.180+5% என சேர்த்து ரத்து கட்டணம் வசூலிக்கப்படுமாம். ஆனால் 2nd ஸ்லீப்பர் மற்றும் இருக்கை வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.