நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. சமீபத்தில்கூட, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்று முழுதாய் இன்னும் ஒரு வாரம்கூட ஆகாத நிலையில், அடுத்து அதே மாநிலத்தில் மற்றொரு மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ஜாட் (வயது 26). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (பிப்.14) திருமண ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பிரதீப் ஜாட் மணமகன் அலங்காரத்துடன் குதிரை மீது ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது திடீரென குதிரை மீது அமர்ந்திருந்தவாறே பிரதீப் ஜாட் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர், மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருமண நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், குதிரையில் இருந்து மயங்கி விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.