எம்.எஸ்.சுவாமிநாதன்
எம்.எஸ்.சுவாமிநாதன்  புதிய தலைமுறை
இந்தியா

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்; அரசியல் தலைவர்கள் இரங்கல்!

PT WEB

யார் இந்த எம்.எஸ்.சுவாமிநாதன்?

எம்.எஸ்.சுவாமிநாதன் கும்பகோணத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு அதிக மகசூல் தரும் அரிசி, கோதுமை வகைகளை அறிமுகப்படுத்தி விவசாயப் புரட்சிக்கு வித்திட்டார். அரிசி தட்டுப்பாட்டை நீக்க நவீன வேளாண் அறிவியல் முறைகளை கண்டறிந்தவரும் இவரே. அதுமட்டுமல்லாது வேளாண்துறை செயலாளர், மத்திய திட்டக் குழு துணைத் தலைவர், உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ராமன் மகசேசே விருது உள்ளிட்ட விருதுகளையும் பத்மவிபூஷண், எஸ்.எஸ். பட்நாகர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன்

மேலும் பொருளாதார சூழலியலின் தந்தை என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு இவரை கவுரவித்ததுள்ளது. 1999ல் டைம் இதழின் சிறந்த 20 ஆசிரியர்கள் கவுரவத்திற்கு தேர்வான 3 இந்தியர்களில் இவரும் ஒருவர். இப்படி இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தி சர்வதேச அளவில் புகழ்பெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன், வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலை 11.20க்கு உயிரிழந்தார். பல்வேறு அரசியல் தலைவர்கள் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் மோடி

“நெருக்கடியான காலத்தில் வேளாண்மையில் எம்.எஸ்.சுவாமிநாதன் செய்த பணி பல மில்லியன் மக்களின் வாழ்க்கையை மாற்றியது; மேலும் அவரது பணிகள் நம் தேசத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது” என்றுள்ளார்.

ஆளுநர் ரவி இரங்கல்

ஆளுநர் ரவி

”பசுமைப் புரட்சியின் தந்தையும், நவீன பாரதத்தை கட்டமைத்தவருமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவர் எப்போதும் நம் இதயங்களிலும் மனதிலும் வாழ்வார்; துயர்மிகு இந்நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன” என்றுள்ளார்

மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

"சுற்றுச்சூழல் வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்; பசிப்பிணி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகிய குறிக்கோளுக்கு முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றியவர்.

கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது மாநிலத் திட்டக் குழுவில் இடம்பெற்று ஆலோசனைகளை வழங்கியவர்; எம்.எஸ்.சுவாமிநாதனின் இழப்பு அறிவியல் துறைக்கும், தமிழ்நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்" என்றுள்ளார்.