ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஆதார் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தீர்ப்பளித்தது. மிக முக்கியமாக குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் ஆதார் இல்லை என்பதற்காக மறுக்கக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் குழந்தைகளுக்கு ஆதாரம் கட்டாயம் எனவும், ஆதார் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வரவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், பஞ்சாப்பில் நடைபெற்று வரும் இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிய மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்குவதற்கான சட்டத்தை விரைவில் கொண்டு வரவுள்ளோம்” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “ஆதார் இணைப்பில் உங்களது பெயரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், பயோமெட்ரிக்கை, கைரேகை உள்ளிட்டவற்றை மாற்ற முடியாது. அதனால், போலியான ஓட்டுநர் உரிமம் பெற முயற்சித்து தெரிந்துவிடும். ஓட்டுநர் உரிமம் வழங்குவது இன்னும் ஒரு வரைமுறைக்கு வரவில்லை. அதனை முறை செய்து தகுதிவாய்ந்த பயிற்சிப் பள்ளிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.