இந்தியா

மனப் பிரச்னைகளுக்காக 24 மணி நேரமும் இயங்கும் கிரண் ஹெல்ப் லைன் - உங்கள் மொழிகளிலும்..!

webteam

மத்திய அரசு மன நல பிரச்னைகளால் அவதியுற்று வருபவர்களுக்கு உதவும் வகையில், கிரண் திட்டத்தின் கீழ் ஒரு உதவி எண்ணை வழங்கியுள்ளது.

மனநலப் பிரச்னைகளால் உழன்று கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய செல்போன் எண்ணை வழங்கியுள்ளது. கிரண் (1800 -599 -0019) என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தத் திட்டத்தை அமைச்சர் தாவர் சந்த் ஹெலாட் அமல்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது “ இந்தச் சேவை ஆரம்பத்திலேயே பிரச்னையை கண்டறிதல், உளவியல் ரீதியான ஆலோசனைகள், மன அழுத்தத்தை கையாளுதல், நேர்மறை சிந்தனையை ஊக்குவித்தல் உள்ளிட்டவைகளின் கீழ் இயங்கும். மக்களுக்கு அறிவுரைகளை வழங்கும் இந்தச் சேவை குடும்ப உறுப்பினர்கள், தன்னார்வ நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பலவற்றில் உதவி கரமாக செயல்படும். 

குறிப்பாக இந்தச் சேவை குடும்ப உறுப்பினர்களின் மனப் பிரச்னைகளுக்கு பெரும் தீர்வாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

இந்தச் சேவை ஹிந்தி, அஸாமி, மராத்தி, ஒடிசா, தெலுங்கு, தமிழ், மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், பெங்காலி, உருது, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இயங்குகிறது. இதற்காக 668 உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.