ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி புதிய தலைமுறை
இந்தியா

புதுச்சேரிக்கு வரும் ஆளுநர்களிடம் சொத்துக் கணக்குகளை கேட்க வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்

webteam

செய்தியாளர்: ரகுமான்

புதுச்சேரி மாநில திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பொதுக்கூட்டம் கருவடிகுப்பத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், புதுச்சேரி

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புறையாற்றிய ஆர்.எஸ்.பாரதி,

“திமுகவை அழிக்க யாரெல்லாம் நினைத்தார்கள், எத்தனை பிரதமர்கள் நினைத்தார்கள் தெரியுமா? நான் வரலாற்றை கூறுகின்றேன். ஒருமுறை ஜவஹர்லால் நேரு சொன்னார்... ‘திமுகவால் வெற்றிபெறவும் முடியாது ஆட்சிக்கு வரவும் முடியாது’ என்று. ஆனால், அவரது மகள் இந்திராவை அழைத்து பிரதமராக்கிய பெருமை திமுகவை சாரும். அதே போல் இன்று வரை நேருவின் குடும்பத்திற்கு விசுசமாக இந்த திமுக இருப்பதற்கு என்ன காரணம் என்றால், எங்களை அழிக்க நினைத்தவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் வரவேற்கும் மனப்பான்மை கொண்ட இயக்கம் திமுக.

மக்கள் ஓட்டு போடாமலேயே மத்தியில் அமைச்சராகியுள்ளார் நிர்மலா சீதாராமன். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று பாராளுமன்றத்தில் திமுக குரல் கொடுத்தது. ஆனால், பாஜக அரசு அதை செய்யவில்லை. காரணம் யாரையாவது ஒருத்தரை இங்கு (புதுச்சேரி) அனுப்பி மொத்தமாக இங்குள்ளவற்றை சுரண்டிக்கொண்டு செல்லவேண்டும். அதற்கு இங்கு துணை நிலை ஆளுநர் தேவை.

ஆர்.எஸ்.பாரதி

புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநராக வருபவர்களுக்கு முதலில் எவ்வளவு பணம் இருந்தது என்று கேட்க வேண்டும். ஏனெனில் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கெல்லாம் கணக்கு கேட்கின்றீர்களே? அதே போல புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் ஆளுநர்களுக்கு முன்பு எவ்வளவு சொத்து இருந்தது, பதவி முடிந்து போகும்போது எவ்வளவு சொத்து உள்ளது என்பதையும் கேட்க வேண்டும். நான் சவால் விட்டு கூறுகின்றேன்... இந்த மாநிலத்தின் பணம் எல்லாவற்றையும் ஆளுநர்கள் சுருட்டிக்கொண்டு செல்கின்றார்கள். அவர்கள் மீது வழக்குப்போட முடியாது, கணக்கு கேட்க முடியாது... அதனால்தான் அவர்கள் அப்படி நடந்து கொண்டுள்ளார்கள்” என கடுமையாக சாடினார்.

மேலும் பேசுகையில், “10 ஆண்டுகால ஆட்சியில், 411 எம்.எல்.ஏக்களை விலை கொடுத்து வாங்கியவர் மோடி. இது எந்த பிரதமரும் செய்யாத ஒன்று. தமிழ்நாட்டில் ஒரு கவர்னர் உள்ளார். ராஜ்பவனின் உட்கார்ந்து கொண்டு அனைத்து பணக்காரர்களையும் அழைத்து அமலாக்கத் துறையை காட்டி மிரட்டி பணம் பறிக்கின்றார். நான் பகிரங்கமாக சொல்கின்றேன், தமிழகத்தில் பேசினால்கூட வழக்கு பாயாது எனச்சொல்லலாம்...

நான் நீங்கள் ஆளும் புதுச்சேரி மாநிலத்தில் சொல்லுகிறேன், பாஜக ஆளாத மாநிலத்தில் எல்லாம் கவர்னர்கள் மிகப்பெரிய பணக்காரர்களை, கள்ள மார்க்கெட்டில் பணத்தை கொள்ளை அடித்து வைத்திருப்பவர்களின் பட்டியல் தயாரித்து வருமானவரித் துறையிடமிருந்து நோட்டீசை பெற்று ராஜ்பவனில் உட்காரவைத்து வசூல் செய்கின்றார்கள்.

PM Modi

2016 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் கூட்டணியில் இருக்க வேண்டும் என கலைஞர் பெரிதும் விரும்பினார். ஆனால், அது வேறு ஒருவரிடம் விழுந்தது, அதற்கு விஜயகாந்த் பொறுப்பு அல்ல. கூட இருந்தவர்கள் கெடுத்தார்கள், நயவஞ்சகர்கள் கெடுத்தார்கள்... அதன் விளைவு, வாக்குகள் பிரிந்தது திமுக தோற்றது, அதிமுக வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்று முதலமைசாராக இருந்திருந்தால், இன்று வரை உயிரோடு இருந்திருப்பார், அதுமட்டுமல்ல ஜெயலலிதாவும் உயிரோடு இருந்திருப்பார். ஏனெனில் அவர் தோற்றிருந்தால் அமெரிக்கா சென்று அவரது உடலை நன்றாக கவனித்திருப்பார், உயிரோடும் இருந்திருப்பார். விஜயகாந்தும் இறந்திருக்க மாட்டார்.

ஒரு தேர்தலில் தவறான முடிவெடுத்தால் என்னென்ன நஷ்டங்கள் ஏற்படும் என்பதற்கு 2016 தேர்தல் ஒரு உதாரணம். சி.ஏ.ஜி அளித்த ஊழல் குற்றச்சாட்டில் 2024-க்கு பிறகு பிரதமர் மோடி ஆயுள்தண்டனை பெறும் குற்றவாளியாவார்” என்று பேசினார்.