ஜம்மு காஷ்மீர் ஆளுநராக செயல்பட்டு வருபவர் என்.என்.வோரா. வரும் 28-ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது. அரசாங்கமும் இல்லாமல் புதிய ஆளுநர் ஒருவரை நியமித்தால் அது தீவிரவாத அச்சுறுத்தலை எதிர் கொள்ளுவது கடினம் என மத்திய அரசு நினைக்கிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே முடிவடையும் பதவிக்காலத்தை இன்னும் 3 மாதத்துக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்த பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு இன்று மாலைக்குள் அனுப்பப்படும் என தெரிகிறது.
பின்னணி
பிடிபிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் காஷ்மீரில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை. ஆனால் பிடிபிக்கு 28 இடங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவை பெற்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முப்ஃதி தனது இராஜிநாமாவை ஆளுநர் என்.என்.வோராவிடம் அளித்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 5 மணிக்கு பேச உள்ளார். இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் , பாஜக தனது தவறை ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்றும் இந்த கூட்டணி நீண்ட காலம் செல்லாது என்று முன்பே சொன்னதாகவும் தெரிவித்தார்.
இது போன்ற சூழலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயலுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, பிடிபி கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைக்கும் கேள்விக்கு இடமே இல்லை என்றும் பிடிபியுடன் சேர்ந்து எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்