இந்தியா

தீப்பிடித்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - விசாரணை நடத்த அரசு உத்தரவு

webteam

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் புனேவில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று, புனேவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தானாக தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீப்பிடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி, வாகனத்தின் பாதுகாப்புத் தரங்கள் குறித்து பயனர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓலா நிறுவனம் கூறியது. இந்த சம்பவத்திற்கு பதிலளித்த ஓலா இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், "நாங்கள் எப்போதும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம். நிக்ழ்ந்த சம்பவம் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். பிரச்னைகள் இருந்தால் அவற்றை உடனடியாக சரிசெய்வோம்" என்றார்.

இந்நிலையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தீ, வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (CFEES) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பதற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. CFEES க்கு எழுதிய கடிதத்தில், பிரச்னைக்கான தீர்வு நடவடிக்கைகளுடன் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. தீ, வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (CFEES) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற அமைப்பின் (DRDO) ஆய்வகங்களின் கீழ் இயங்கும் மையம் ஆகும்.