வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தை இல்லாத தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது நடைமுறையில் உள்ளது. ஆனால், வாடகை தாய் முறை வர்த்தகரீதியாக பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, உலக அளவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று தரும் வர்த்தக மையமாக இந்தியா மாறி வருவதாக சொல்லப்படுகிறது.
இதை முறைப்படுத்தும் வகையில் வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா 2019-ஐ மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சட்டப்படி திருமணமாகி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவடைந்த இந்திய தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெறலாம். குழந்தைப் பெற்று தரும் வாடகைத் தாய் அந்தத் தம்பதிகளின் உறவினராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
ஒரு பெண் ஒரு முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க வேண்டும். அவ்வாறு வாடகைத் தாயாக இருக்கும் பெண் திருமணமாகி ஏற்கனவே குழந்தை பெற்றிருக்க வேண்டும். வாடகைத் தாயாக இருக்கும் பெண் 25 முதல் 35 வயது உடையவராக இருக்க வேண்டும்.
இந்த முறையை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அளவில் வாடகைத் தாய் வாரியம் அமைக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடகைத் தாய் மூலம் பெறப்பட்ட குழந்தைகளை தம்பதிகள் எக்காரணம் கொண்டும் கைவிட்டு விடக் கூடாது என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.