இந்தியா

சத்தீஸ்கர் விமான நிலையத்தில் அரசு ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகள் உயிரிழப்பு

Veeramani

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு அரசு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.

ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் வழக்கமான பயிற்சியின்போது ஓடுபாதையில் நடந்த இந்த விபத்தில், விமானிகள் கேப்டன் கோபால் கிருஷ்ண பாண்டா மற்றும் கேப்டன் ஏபி ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.



இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் சேதமடைந்தது, இதில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் மாநில அரசின் உத்தரவின் பேரில் இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்காக இரங்கல் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.