கொரோனா இரண்டாவது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மாநில அரசுகள் சமர்ப்பித்த அறிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அப்போது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்பது மாநில அரசுகள் அளித்த அறிக்கை மூலம் தெரிய வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கொரோனா மரணங்களை எவ்வாறு வகைப்படுத்தி தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்ததாகவும், அதன்படி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரேதசங்களால் வழங்கப்பட்ட அறிக்கைகளை பார்த்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட இறக்கவில்லை என தெரிய வருவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.