இந்தியா

கோரக்பூர் மருத்துவமனையில் மேலும் 6 குழந்தைகள் உயிரிழப்பு

webteam

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஆக்ஸிஜன் இல்லாததால் சுமார் 70 குழந்தைகள் உயிரிழந்த அரசு மருத்துவமனையில் மூளை பாதிப்பால் மேலும் 6 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த இறப்புகள் கடந்த சனிக்கிழமை முதல் நேற்றுவரையான 3 நாட்களில் நடத்ததாக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் புஷ்கர் ஆனந்த் தெரிவித்தார். அதே காலகட்டத்தில் என்சிபெலைட்டிஸ் எனப்படும் மூளை பாதிப்பால் 21 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 75 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தி கைதாகினர். ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடப்பது புதிதல்ல என கூறியுள்ள பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ஆதித்யநாத் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார். இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என மாநில தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.