இந்தியா

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: என்ஐஏ வழக்கில் ஸ்வப்னா சுரேஷ்க்கு ஜாமீன்

Veeramani

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் பிஎஸ் மற்றும் 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கில், கேரள உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

எர்ணாகுளம் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இந்த வழக்கில் ஜாமீன் கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை ஏற்று நீதிபதி கே.வினோத் சந்திரன், நீதிபதி சி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. 25 லட்சம் ரூபாய் பிணைத்தொகையுடன் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள், நாட்டின் பொருளாதார பாதுகாப்பை அச்சுறுத்தி சீர்குலைக்கும் நோக்கத்துடன் தங்களுக்குள் சதி செய்து, பயங்கரவாத கும்பலை உருவாக்கி, நிதி திரட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தனர் என்பது என்ஐஏ வழக்கு. இதனால், அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இந்திய நாட்டின் நட்புறவை சேதப்படுத்தினர் என்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) பிரிவு 16, 17, 18 மற்றும் 20 ன் கீழ் வழக்குப் பதியப்பட்டிருந்தது.

குற்றப்பத்திரிகையில் உபா சட்டத்தின் கீழ் இது ஒரு குற்றமாக இல்லை. சுங்கச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய தங்கக் கடத்தல் குற்றத்தை குறிப்பிட்டு மட்டுமே குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும், நாட்டில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ய கடத்தல் நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டினர்.

இதன்மூலமாக 15 மாதங்களுக்கு பிறகு சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவருகிறார் ஸ்வப்னா சுரேஷ். ஆனால் தங்கக் கடத்தல் வழக்கில் மற்றொரு குற்றவாளியான பி.எஸ்.சரித் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.