இந்தியா

''ஆடைகளை கிழித்துவிடுவேன் என மிரட்டினார்’’ - ஊபர் கார் ஓட்டுநர் மீது புகார்

webteam

காரை விட்டு இறங்கினால் ஆடைகளை கிழித்துவிடுவேன் எனத் தன்னை மிரட்டியதாக ஊபர் கார் ஓட்டுநர் மீது பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் வாடகை கார் நிறுவனமான ஊபர்  மீது குற்றம் சாட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 'ஊபர்  நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடாக உள்ளதாக’ குறிப்பிட்டுள்ளார். அவரின் சமூக வலைத்தள பதிவில், ”நான் இரவு உணவுக்குப் பிறகு ஊபர்  கார் முன்பதிவு செய்தேன். அந்த ஓட்டுநர் நான் மிகவும் மோசம் என போனில் யாரிடமோ கூறினார். படித்த பெண்கள் எல்லாம் 7 மணிக்கு முன்பாகவே வீட்டுக்குச் செல்ல வேண்டும். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தக் கூடாது எனத் தெரிவித்தார். 

நான் மது அருந்தவில்லை என்றும் உங்களது வேலையை மட்டும் பாருங்கள் என்றும் கூறினேன். அவர் திடீரென காரை மெதுவாக இயக்கினார். நான் பயந்துபோய், ஊபரின் பாதுகாப்பு உதவிக்கான பட்டனை அழுத்தினேன். ஆனால் ஊபரில் இருந்து ஓட்டுநருக்கே அழைப்பு சென்றது. நான் கடுமையான போதையில் இருப்பதாக ஓட்டுநரும் கூறிவிட்டார். நான் வேறு வழியில்லாமல் அலறி எனக்கு உதவி வேண்டுமென கேட்டேன். அவர்கள் வேறு ஒரு காரை அனுப்புவதாக தெரிவித்தனர். ஆனால் காரைவிட்டு கீழே இறங்கினால் ஆடைகளை கிழித்துவிடுவேன் என ஓட்டுநர் மிரட்டினார். 

ஊபரில் இருந்து எனக்கு உதவி கிடைக்கவே இல்லை. நான் என் நண்பர்களை உதவிக்கு அழைத்தேன். ஒரு அவசரத்தில் பாதுகாப்பு உதவிக்கான பட்டனை அழுத்தினால் பயணிக்கு தானே அழைப்பு வர வேண்டும். ஆனால் ஓட்டுநருக்கு அழைப்பு வருவது எப்படி பாதுகாப்பு ஆகும்? எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய தொலைபேசியில் பதிவான குறுந்தகவல்களையும் சாட்சியாக அவர் இணைத்து இந்தத் தகவலை பதிவிட்டுள்ளார்.