இந்தியா

பிபின் ராவத்திற்கு ராணுவ மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு

webteam

மறைந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு ராணுவ மரியாதையுடன் இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்ட பிபின் ராவத் மற்றும் மனைவி மதுலிகா ராவத்தின் உடல்கள் காலை 9 மணியளவில் காமராஜ் சாலையில் இருக்கும் அவர்களது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இறுதி மரியாதை மற்றும் இறுதி சடங்கு செய்த பிறகு, பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள், முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்த ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மதியம் இரண்டு மணிக்கு பிபின் ராவத்தின் இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, டெல்லி கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பரார் சதுக்கத்தை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியாக துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா உடல்கள் அவர்களது குடும்பத்தினரின் விருப்பப்படி தகனம் செய்யப்படும் என அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இறுதி மரியாதை மற்றும் இறுதி சடங்குகள் 5மணி அளவில் முடிவடையும் எனத் தெரிகிறது.