குஜராத்தில் உள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ள. அகமதாபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் செயல்பட்டு வந்த நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் தங்கியிருந்த தனது மகள்களை மீட்டு தர வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா புகார் அளித்தார்.
இதையடுத்து அந்த ஆசிரமம் மூடப்பட்டது. இந்நிலையில், நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகம் எப்படி இடம் கொடுத்தது என்பது பற்றி அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையம் விசாரணை நடத்தியது. அதில் விவசாயம் அல்லாத பயன்பாடுக்கு நிலம் பயன்படுத்தப்படும் போது அதில், 40 சதவிகிதத்தை நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு வழங்க வேண்டும் என்ற விதியை பள்ளி நிர்வாம் பின்பற்றாதது தெரியவந்தது.
இதையடுத்து, நித்யானந்தாவின் ஆசிரமத்தை பள்ளி நிர்வாகமே இடித்துவிட்டு, அந்த இடத்தை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று நகர மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளி நிர்வாகம் நித்யானந்தா ஆசிரமத்தை இடிக்கத் தொடங்கியிருக்கிறது.