இந்தியா

தொடர் மழை எதிரொலி : தவளைகளுக்கு விவாகரத்து

தொடர் மழை எதிரொலி : தவளைகளுக்கு விவாகரத்து

webteam

தொடர் மழையை நிறுத்துவதற்காக மத்தியப் பிரதேசத்தில் தவளைகளுக்கு விவாகரத்து செய்யும் சடங்கு நடைபெற்றது.

இந்தியாவின் கிராமங்களில் மழைப் பொழிவு இல்லாத நேரங்களில் பல்வேறு சடங்குகளும், பூஜைகளும் செய்யப்படுவது இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் கூட மழை பொழிய வேண்டுமென சில மாதங்களுக்கு முன்னர் யாகங்கள் நடத்தப்பட்டன. இதனை ஆளுங்கட்சியினர் முன்னின்று செய்தனர். இதேபோன்று தவளைகள், ஓணான்கள், நரிகள், கழுதைகள் ஆகியவற்றிற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்குகளும் நடத்தப்படும்.

அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தின் போபால் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைப்பட்டது. மழைபொழிய வேண்டும் என வேண்டிக்கொண்டு இந்த திருமணச் சடங்கு நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக மழைப்பொழிவு மத்தியப் பிரதேசத்தில் பெய்துவிட்டது. வழக்கத்தை விட 26% கூடுதலான மழைப்பொழிவை மத்தியப் பிரதேசம் பெற்றுள்ளதாக வானிலை மையங்கள் அறிவித்துள்ளன. 

இருப்பினும் மழை இன்னும் நிற்கவில்லை. இதனால் திருமணம் செய்து வைத்த தவளைகளுக்கு விவாகரத்து செய்தால் மழை நிற்கும் என்று முடிவிற்கு போபால் மக்கள் வந்தனர். திருமணம் செய்த தவளைகளை தேடிப் பிடிக்க முடியாது என்பதால், அவற்றிற்கு பதில் இரண்டு தவளை பொம்மைகளை வைத்து விவாகரத்து சடங்கை செய்து முடித்தனர்.