இந்தியா

”குடிபோதையில் அடம்பிடித்து பைக் ஓட்டினாள்”-டெல்லி பெண் மரணத்தில் தோழி பகீர் வாக்குமூலம்!

Sinekadhara

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 20 வயது பெண்ணொருவர் கார் ஒன்றின் அடியில் சிக்கி, சுமார் 12 கிலோமீட்டருக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், வாகனம் ஓட்டியபோது அந்த பெண் மது அருந்தி இருந்ததாக தெரிவித்துள்ளார் அவருடைய தோழி.

கடந்த சனிக்கிழமை, புத்தாண்டுக்கு முந்தைய நாளன்று, ஒரு நிகழ்ச்சிக்குச் செல்வதாக தாயிடம் கூறிவிட்டு சென்ற அப்பெண், கொண்டாட்டத்தை முடித்துவிட்டு திரும்பியபோது கன்ஜாவ்லா - சுல்தான்புரி பகுதியில், 5 பேர் சென்ற கார் மோதியதில் விபத்துக்குள்ளானார். இதை அறியாத கார் ஓட்டுநர் மற்றும் பிறர், காரை நிறுத்தாமல் சென்றதில் அப்பெண் காரில் சுமார் 12 கி.மீ வரை இழுத்துச்செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், காரிலிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் விபத்தின்போது மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், இளம்பெண் காரின் அடியில் சிக்கியிருந்தது தங்களுக்குத் தெரியாது எனவும் வாக்குமூலம் அளித்தனர். இதற்கிடையில் தனது மகளின் ஆடைகள் கிழிந்திருந்தது எனவும், அதனால் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் எனவும் உயிரிழந்த பெண்ணின் தாயார் குற்றம்சாட்டினார். ஆனால் அவர் பிறப்புறுப்பில் காயங்கள் ஏற்படவில்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணுடன் அவரது தோழியும் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், விபத்தில் சிக்கிய இளம்பெண் இருசக்கர வாகனத்தை ஓட்டியபோது மதுபோதையில் இருந்தார் என அவரது தோழி தெரிவித்துள்ளார்.

”இருசக்கர வாகனத்தை ஓட்டவேண்டும் என அவள் அடம்பிடித்தபோது, அவள் மதுபோதையில் இருந்தாள். எங்களுடைய வாகனத்தின்மீது கார் மோதியவுடன், நான் சாலையின் ஒரு பக்கத்தில் விழுந்தேன். எனது தோழி காரின் அடியில் மாட்டிக்கொண்டார். காரில் இருந்தவர்களுக்கு அவள் காருக்கு அடியில் சிக்கியிருந்தது தெரியும். நான் போலீசாரிடம் இதுகுறித்து தெரிவிக்காமல் வீட்டிற்கு சென்றுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக இந்த விபத்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தோழியின் வாக்குமூலம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.