இந்தியா

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு 3 வேளையும் சுடச்சுட கட்டணமில்லா அன்னதானம்

kaleelrahman

சபரிமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மூன்று வேளையும் சுடச்சுட கட்டணமில்லா உணவு வழங்கப்படுகிறது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக கேரள தேவஸ்வம்போர்டு மற்றும் பல ஐயப்பா சேவா சங்கங்களின் சார்பில் அன்னதானம் வழங்கபட்டு வந்தது. ஆனால், பக்தர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவை உறுதி செய்ய முடியவில்லை.

இதற்காக கேரள அரசு கடந்த ஆண்டு 22.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சபரிமலை மாளிகைப்புரம் அருகே ஒரே நேரத்தில் 1,800 பேர் அமர்ந்து சாப்பிடும் அதிநவீன அன்னதான மண்டபம் கட்டப்பட்டது. இது கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இந்த அன்னதான மண்டபம் மூலம் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் சுடச்சுட வயிறார உணவு உண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

நாள்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரை, காலை உணவாக உப்புமாவும் கடலை குழம்பும் வழங்கப்படுகின்றன. மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை இருவகை கூட்டு, சாம்பார், பொரியல், ரசம், மோருடன் சாப்பாடு வழங்கப்படுகிறது. விருப்பப்படும் பக்தர்களுக்கு மதிய உணவு பார்சலாகவும் வழங்கப்படுகிறது.

மாலை ஆறு மணி முதல் இரவு உணவு வழங்கப்படுகிறது. உணவாகவும் கஞ்சியாகவும் பயறு வகைகளோடு நடை அடைப்பு பின்னும் வரும் பக்தர்கள் அனைவருக்கும் நேரம் பார்க்காமல் கட்டணம் இன்றி சுடச்சுட உணவு வழங்கி பக்தர்களின் பசியாற்றப்படுகிறது.

தற்போது தினசரி பக்தர்களின் வருகை சராசரியாக 45 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மண்டல பூஜை முடிந்து மகரவிளக்கு பூஜை முடியும் வரை பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.