இந்தியா

வழக்கு மேல் வழக்கு: ட்விட்டர் இந்தியா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

JustinDurai
ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி போலீஸின் சைபர் க்ரைம் பிரிவு, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதில், ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக குழந்தைகளைக் கொண்டு உருவாக்கப்படும் ஆபாசப் படங்கள் பதிவேற்றப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி போலீஸின் சைபர் க்ரைம் பிரிவு போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக சைபர் குற்றப் பிரிவின் உயரதிகாரி ஆணையத்தின் முன் ஆஜராகும்படியும் எச்சரித்துள்ளது.
ட்விட்டரில் லடாக், காஷ்மீர் ஆகியவற்றை இரண்டு தனி நாடுகளாக சித்தரித்து வெளியான புகைப்படம் தொடர்பாக ட்விட்டர் இந்தியா நிறுவனத் தலைவர் மனிஷ் மகேஸ்வரி மீது ஏற்கெனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது போக்ஸோ சட்டமும் பாய்ந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, மத்திய அரசு அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகளுக்கு இணங்காதது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டப் பாதுகாப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.