இந்தியா

அலிகார் சிறுமி கொலை - வழக்கில் ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு

rajakannan

அலிகார் அருகே 3 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் என வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரை அடுத்த தப்பால் பகுதியில் 3 வயது சிறுமி கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் கடன் பிரச்னையில் சிறுமியின் பெற்றோர் உடனான சர்ச்சையில் கடன் கொடுத்தவர்கள் இந்தக் கொடூர கொலையை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியை கொலை செய்து தங்களது வீட்டின் அருகே புதைத்து வைத்துள்ளனர். போலீசார் மோப்ப நாய் உதவியுடன் உடலைக் கண்டெடுத்தனர்.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நாங்கள் யாரும் வாதாடப் போவதில்லை என்று அலிகார் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். “தப்பால் கிராமத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆதரவாக நிற்போம். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டோம். வெளியில் இருந்து யார் வந்தாலும் வாதாட அனுமதிக்க மாட்டோம். சிறுமிக்காக நாங்கள் போராடுவோம்” என அலிகார் பார் அசோஷியேஷன் தெரிவித்துள்ளது.

சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு நியமித்துள்ளது. 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தன் மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 வருடங்களுக்கு முன்பு வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வருகிறது.