அண்மையில் முடிந்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் 99 தொகுதிகளை கைபற்றி மீண்டும் ஆட்சி அமைக்கிறது இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி. மீண்டும் முதல்வராக வரும் வியாழன் அன்று பொறுப்பேற்க உள்ளார் பினாராயி விஜயன். அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர். முதல்வர் பினராயி விஜயனை தவிர கடந்த ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பெற்ற ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கக்கப்படவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவின் படி இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்தவர்களுக்கு கட்சி முடிவின் படி தற்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை. நிபா மற்றும் கொரோனா வைரஸ் தொற்றை திறம்பட கையாண்ட முன்னாள் கேரள சுகாதாரத்துறை அமைச்சராக (2016 - 21) இருந்த ஷைலஜா டீச்சருக்கு அமைச்சராகும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில் “புதியவர்கள் பொறுப்பேற்க வருவது வரவேற்கத்தக்க ஒன்று. அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். கடந்த முறை எங்கள் கட்சி என்னை அமைச்சராக தேர்வு செய்தது. அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அதே நேரத்தில் திறம்பட பணியாற்றும் பலர் கட்சியில் உள்ளனர். இது நல்ல முடிவு” என ஷைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.