இந்தியா

சஞ்சீவுக்கு ஆயுள் தண்டனை - ஜாம்நகர் நீதிமன்றம்

சஞ்சீவுக்கு ஆயுள் தண்டனை - ஜாம்நகர் நீதிமன்றம்

webteam

விசாரணையின் போது கைதி இறந்த வழக்கில் குஜராத் பிரிவு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை விதித்து ஜாம்நகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட் 1990ஆம் ஆண்டு ஜாம்நகரின் கூடுதல் எஸ்பியாக பணியிலிருந்தார். அப்போது பாஜக தலைவர் அத்வானியின் கைதிற்கு எதிராக ரத யாத்திரை சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பிரபுதாஸ் வைஷ்னானி ஒருவர் ஆவார்.

இவர் காவல்துறையின் விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர்  தங்கள் கடமையை தான் செய்ததாக கூறிவந்தனர். அத்துடன் காவல்துறையினர் பிரபுதாஸ் வைஷ்னானியை எந்தவித கொடுமையும் படுத்தவில்லை எனத் தெரிவித்தனர்.எனினும் இந்தச் சம்பவம் தொடர்பாக சஞ்சீவ் பட் மற்றும் பிரவின்சின் ஜாலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குஜராத்தின் ஜாம்நகர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆறு காவல்துறையினருக்கு தீர்ப்பு வழங்கப்படவில்லை. 

சஞ்சீவ் பட் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி கலவரத்தில் இந்துக்கள் மீது சற்று குறைந்த நடவடிக்கை எடுக்க சொன்னதாக கூறியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவரது மனைவி 2012ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் மோடிக்கு எதிராக போட்டியிட்டார். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.