இந்தியா

புதுப்பிக்கப்பட்ட உரிமம் : மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய அன்னை தெரசா சேவை மையம்

newspt

அன்னை தெரசாவின் சேவை மையம் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் புதுப்பித்து கொடுத்துள்ளது.

மேற்கு வங்கம் கொல்கத்தாவில் இயங்கி வரும் அன்னை தெரசாவின் சேவை மையத்திற்கு வழங்கப்பட்டிருந்த வெளிநாட்டு நிதி உதவியினை பெறுவதற்கான அனுமதியை புதுப்பித்து தர, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆவணங்கள் சரிவர சமர்பிக்கவில்லை என்பதுதான், இதற்கான காரணமாக சொல்லப்பட்ட நிலையில், அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை இந்த விவகாரம் ஏற்படுத்தியிருந்தது. கிறிஸ்துமஸ் தினத்தில் அன்னை தெரசா சேவை மையத்தின் வங்கிக் கணக்குகள் இதனால் முடக்கப்பட்டதாகவும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கொந்தளித்திருந்தார்.

இதையடுத்து வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான அனுமதியை புதுப்பிக்க, உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி ஆவணங்களை புதுப்பிக்க டிசம்பர் 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. இதனடிப்படையில் தற்போது இந்த அனுமதி ஆனது புதுப்பித்து தரப்பட்டுள்ளது. அன்னை தெரசாவின் சேவை மையத்தை தவிர, ஜெய நியூ பல்கலைக்கழகத்தின் சேவை மையம், டெல்லி பல்கலைக்கழகத்தின் சேவை மையம் உள்ளிட்ட 25-க்கும் அதிகமான தொண்டு நிறுவனங்களின் அனுமதியும் புதுப்பித்து தரப்பட்டுள்ளது.