பயங்கரவாதத்தின் கொடிய முகத்தை உலகம் உணர்ந்து விட்டதால், அதை வீழ்த்த அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மக்களுக்கு வானொலி மூலமாக உரையாற்றும் மாதாந்திர நிகழ்ச்சியான மனதின் குரலில் இன்று அவர் இதை தெரிவித்துள்ளார். நம்நாட்டின் அரசியல் சட்டத்தை வடிவமைத்த சிற்பிகள் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர் என்று கூறிய பிரதமர், ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை பெற்றிருப்பதற்கு நாம் பெருமைப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவிப்பதாகக் கூறியுள்ள மோடி, 40 ஆண்டுகளாக பயங்கரவாதம் பற்றி இந்தியா எச்சரித்து வரும் நிலையில், உலக நாடுகள் அப்போது அதை பெரிதாக கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இப்போது பயங்கரவாதத்தால் ஏற்படும் பேரழிவை நாடுகள் உணர்ந்துள்ளதாகவும், அதை வீழ்த்த சர்வதேச நாடுகள் கைகோர்க்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். ராணுவத்தில் பெண்கள் இடம்பெறுவதுடன் போர்முனையிலும் பெண்களின் பங்கேற்பைப் பாராட்டுவதாகக் கூறியுள்ள பிரதமர், தமிழத்தில் 900 ஆண்டுக்கு முந்தைய சோழர்களின் கடற்படையிலேயே போர்முனைக்கு பெண்கள் சென்றது வரலாறு என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.