இந்தியா

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை - ஆப்பிள் நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர் அபராதம்

JustinDurai

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது பிரேசில் நீதிமன்றம்.

உலகின் முன்னணி மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அண்மைகாலமாக தமது ஐபோன் மொபைல்களுடன் சார்ஜர் அடாப்டர் வழங்காமலே விற்பனை செய்து வருகிறது. இதனால் ஐபோன் வாடிக்கையாளர்கள் சார்ஜர் அடாப்டரை தனியாக விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். மற்ற செல்போன்களைக் காட்டிலும் ஐபோன்களின் விலை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படும் நிலையில், அதற்கான சார்ஜர் அடாப்டரை கூடவே வழங்காமல் விற்பது ஐபோன் பிரியர்கள் மத்தியில் ஒரு புலம்பலாகவே இருந்து வருகிறது. மின்னணு கழிவுகளை கட்டுப்படுத்துவதற்காக சார்ஜரை போனுடன் விற்க முடியாது என ஆப்பிள் நிறுவனம் கூறிவருகிறது.

இச்சூழலில், அண்மையில் பிரேசில் நாட்டில் சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன் விற்பனைக்கும் அந்நாட்டு அரசு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் சார்ஜர் இல்லாமல் ஐ போன்-12 மாடலை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 2 கோடி டாலர் அபராதம் விதித்துள்ளது பிரேசிலுள்ள சாவ் பாலோ சிவில் நீதிமன்றம். அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரேசிலில் ஐபோன்-12 மற்றும் ஐபோன்-13 வாங்கிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சார்ஜர் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐபோன்களில் சார்ஜர் வைக்காததற்காக இரண்டாவது முறையாக ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது அந்நிறுவனத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: அனைத்து செல்போன், டேப்லெட்களுக்கும் டைப் சி சார்ஜர்தான்! ஐரோப்பிய யூனியன் அதிரடி!