இந்தியா

மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

webteam

2020-21-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.

கடந்த ஆண்டு மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தாக்கல் செய்யப்பட உள்ள இரண்டாவது பட்ஜெட் இது. முந்தைய பாஜக அரசில் ராணுவ அமைச்சராக இருந்து, இந்த முறை நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட்டும் இதுவே ஆகும்.

மக்களவையில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து, உரையை நிதி அமைச்சர் வாசிக்கவுள்ளார். சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலையின் எதிரொலியாக இந்தியாவிலும் வளர்ச்சி விகிதம் தொடர் சரிவு கண்டு வந்துள்ள நிலையில், பட்ஜெட் தாக்கலாகிறது. பொருளாதார மந்தநிலையை சமாளித்து, வளர்ச்சியை அதிகரிப்பதற்கான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மொத்த ஆண்டு வருமானம் 5 லட்ச ரூபாய் வரை வருமானவரி இல்லை என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடுத்தர மக்கள் எதிர்பார்க்கும் வரிச்சலுகைள் ஏதும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் தாக்கல் செய்ததும், அவை ஒத்திவைக்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் அதன் மீதான விவாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.