இந்தியா

4 சக வீரர்களை சுட்டுக் கொன்ற பிஎஸ்எப் வீரர் - குண்டு பாய்ந்து தானும் பலி

ஜா. ஜாக்சன் சிங்

பஞ்சாபில் 4 சக வீரர்களை சுட்டுக் கொன்ற எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர் தானும் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிஎஸ்எப் முகாம் அமைந்துள்ளது. பாகிஸ்தானின் வாஹா எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஎஸ்எப் வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை அங்கு பணியில் இருந்த சடேப்பா என்ற காவலர், திடீரென தனது துப்பாக்கியால் அருகில் இருந்த சக வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, சடேப்பாவும் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடேப்பா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சக வீரர்கள் அவரை சுட்டார்களா என்பது தெரியவில்லை.

இந்த விவகாரம் குறித்து பிஎஸ்எப் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பணி அழுத்தத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா அல்லது பிஎஸ்எப் வீரர்களுக்கு ஏற்பட்ட தகராறால் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததா ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.