மீனவர்கள் பிரச்னை தமிழகத்தில் தனல் போல் கொதித்தாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தமிழக மீனவர்களும் இந்தியக் குடிமகன்கள்தான் எனவும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி பேசினார்.
மாநிலங்களவையில் பேசிய கனிமொழி, நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் பலமுறை நடைபெற்று விட்டது. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் தனல் போல் கொதித்தாலும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களும் இந்திய குடிமகன்கள்தான். தற்போதைய பிரதமர் மோடி, சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோன்ற நிகழ்வு நடைபெற்றபோது, அப்போதைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். ஆனால், இப்போது உறுதியான மத்திய அரசு இருக்கிறது என்கிறார்கள். ஆமோதிக்கிறோம். ஆனால், ஏன் மீனவ இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி கண்டுகொள்ளவில்லை. கவலைப்படவில்லை. நாங்களும் இந்நாட்டின் குடிமகன்கள்தான் என திமுக மாநிலங்களவை எம்.பி.கனிமொழி பேசினார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் பேசுகையில், இலங்கை கடற்பரப்பிற்குள், தமிழக மீனவர்கள் நுழைந்திருந்தாலும், சர்வதேச சட்டப்படி, அவர்களை சுட்டுக்கொல்ல கூடாது. கைது மட்டுமே செய்ய வேண்டும். பரஸ்பர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்களை விடுவிக்க வேண்டும். இம்முறை சட்டத்தை மீறும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு மீனவ இளைஞர் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதுபோன்ற சம்பவம் இனியொருமுறை நடைபெற கூடாது. மீனவர்கள் தொடர்பான பல விவகாரங்களில், இத்தகைய விரும்பதகாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இருநாட்டு ஒப்பந்தபடி, மீனவர்களை சுடக்கூடாது என குறிப்பிடப்படுகிறது. இதை மீறிய இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார்.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர், எம்.ஜே.அக்பர், துப்பாக்கிச்சூட்டில் மீனவ இளைஞர் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதுதொடர்பாகவும், மீனவர்கள் நலன் குறித்தும் இலங்கையிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையை மத்திய அரசு மிகத் தீவிரமாக அணுகுகிறது. துணை குடியரசு தலைவர் இந்தோனேசியா சென்றிருந்தபோது, அவர் மூலமாக, அங்கு வந்திருந்த இலங்கை அதிபரிடம் மீனவ இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி கடுமையாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாகவும். இலங்கை அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.