இந்தியா

அசாம் மாநிலத்தில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல்: பலியாகும் பன்றிகள்!!

webteam

அசாம் மாநிலத்தில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமான 306 கிராமங்களில் 2500 பன்றிகள் இறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அதுல் போரா, ''இது ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் என கண்டறியப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு உண்டாகும் நோய்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் NIHSAD என்ற நிறுவனம் இதனை உறுதி செய்துள்ளது. இந்த நோயுக்கும் கொரோனாவுக்கும் தொடர்பில்லை. இந்தியாவில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலின் முதல் நிகழ்வு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019 கணக்கெடுப்பின்படி, அசாமில் பன்றிகளின் மொத்த எண்ணிக்கை 21 லட்சம். ஆனால் இது சமீப காலங்களில் சுமார் 30 லட்சமாக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிக்கப்படாத பன்றிகளை காப்பாற்ற சில நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்து வருகிறோம். பன்றிகளை அழிக்காமல் அதனை பாதுகாக்க முடியுமா என நாங்கள் ஆலோசித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி 1கிமீ சுற்றளவுக்கு பரிசோதனைகளை தொடங்கியுள்ளோம். உடனடியாக பன்றிகளை அழிக்க மாட்டோம். சோதனைக்கு பின்னர் நிலைமைக்கு ஏற்பவே நோய் பாதிக்கப்பட்ட பன்றிகள் அழிக்கப்படும். இது தொடர்பாக அண்டை மாநிலங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.