ஆந்திர தலைமைச் செயலகத்தில் நேற்று (4.4.2025) தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட முக்கிய அமைச்சர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள தெற்கு பிளாக் எண் 2 ல் தடையில்லா மின்சாரம் வழங்கும் (யுபிஎஸ்) அறையில் நேற்று காலை 6:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இங்குதான் , துணை முதலமைச்சர் பவன் கல்யாண் , அமைச்சர் அனிதா மற்றும் அமைச்சர்கள் கேஷவ், நாதள்ள மனோகர், துர்கேஷ், ஆனம் ராம் நாராயண் ரெட்டி, நாராயணா ஆகியோரின் அலுவலகங்கள் உள்ளன.
இந்த தீ விபத்து குறித்து அதிகாரி ஒருவர், தெரிவிக்கையில், “ தீ விபத்தில் யுபிஎஸ் அறையில் இருந்த பேட்டரிகள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது. " என்று தெரிவித்தார்.
தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டநிலையில், சுமார் 20 நிமிடங்களுக்குள் தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நேரில் பார்வையிட்டார். இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.