ரசாயன ஆலையில் ஏற்பட்டத் தீ விபத்தில் நான்கு பேர் பலியாயினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பொய்சர்-தாராபூர் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று ராமெடியோ கெமிக்கல்ஸ் நிறுவனம். இங்குள்ள பாய்லர் நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சத்தம் அருகில் 8 கிலோமீட்டர் தூரம் வரை கேட்டுள்ளது. நிலநடுக்கம் என பீதியடைந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். இந்நிலையில் பாய்லர் வெடித்ததால் அந்த நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அக்கம் பக்கத்து நிறுவனங்களுக்கும் பரவியதால் பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து, விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 பேர் உடல் கருகி பலியாயினர். மேலும் பலர் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தை கலெக்டர் பிரசாந்த் நார்னவாரே பார்வையிட்டார்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தீ, ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. சில இடங்களில் மட்டும் எரிந்து வருகிறது. அதை தீயணைப்புத்துறையினர் அணைத்து வருகின்றனர். இந்த விபத்தில் 6 கெமிக்கல் நிறுவனங்கள் முற்றிலும் எரிந்துள்ளன. பலியானவர்கள் எண்ணிக்கை பற்றி உறுதியாகத் தெரியவில்லை’ என்றார்.