இந்தியா

விவசாயிகளை தீவிரவாதிகளாக விமர்சித்ததாக புகார்: நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு

JustinDurai
வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதாக எழுந்த புகார் தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவை விமர்சித்து நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், ''வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டது வருந்தத்தக்கது, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பதிலாக தெருவில் இருப்பவர்கள் சட்டம் இயற்ற தொடங்கி விட்டார்கள்'' என்று கடுமையான வார்த்தைகளால் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டிருந்தார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சீக்கியர்களை அவரது காலணியில் போட்டு நசுக்கினார் எனவும் மறைமுகமாக தெரிவித்து இருந்தார். கங்கனாவின் இப்பேச்சுக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து சீக்கியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது, டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவினர் மும்பை காவல்துறையில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில், கங்கனா ரணாவத்துக்கு எதிராக சபர்பன் கர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவு 295ஏ-வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.